Wednesday, September 2, 2026

67. தலைப்புத் தாருங்கள்!

தெரிந்த பொருள் பற்றித் தெளிவாகப் பேசினால் யாம்
அறிந்த பொருள்தானே இது என்பீர் அலட்சியமாக
புதிய பொருள் பற்றிப் புரியும் வகையில் கூறினாலோ
புரியவில்லை எமக்கு இது என்று புறம் தள்ளுவீர்

அதனால்தான் கேட்கிறேன் தலைப்புத் தாருங்கள் என்று
இதமான என் பேச்சை இழித்து எதை நீங்கள் சொன்னாலும்
பதமாகச் சொல்வேன் ஒரு பதிலை உமக்கு உறைக்க
இது நீவிர் எனக்களித்த தலைப்புதானே என்பதைச் சுட்டி.

70. மனம், மனம் அது கோவிலாகலாம்!


உள்ளிருந்து உடலை இயக்கும் மனம் என்னும் மந்திர ரிமோட்
அளவில்லா ஆற்றல் கொண்ட உருவற்ற உயர்சக்தி ரோபோட்
கோவிலாகலாம் மனம் என்றார் கவிஞர் ஆனால் அதன்
தாவலால் நாம் படும் துன்பம் அடங்கா எக்கணக்கிலும்.

ஒன்றை விரும்பும் மனம் அதைக் கொள்ள உடலும்
நன்றாய்ச் செயல்படும் பாங்காய் கிட்டிய பயனைத்
துய்ப்பது உடல்தான் உண்மை ஆயின் தீப்பயன் எனும்
துன்பத்தை ஏற்பதும் உடல்தானன்றோ உலகில்!

ஆடச் சொல்லும் பாடச் சொல்லும் தேடச் சொல்லும் பல்பொருள்
ஓடச் சொல்லும் கடமை பொறுப்பு இவற்றைத் துறந்து
மேடு பள்ளமென்று உடல் விழுந்தும் எழுந்தும் படும்
பாடுகளுக்குப் பின்னிருப்பது இந்தப் பாழும் மனமன்றோ!

முற்பகல் இனிப்பைத் துய்க்கும் உடல் மனம் சொல்லி
பிற்பகல் படும் இன்னல் நீரிழிவு நோயின் தாக்கத்தால்
அத்தனைக்கும் ஆசைப்படும் மனத்தின் கட்டளைக்கு
மொத்தமாய்ப் பணிந்ததால் பெரும் துன்பம் உடலுக்கு.

மதம் கொண்ட யானையை அடக்குவார் அங்குசம் கொண்டு
மிதப்பில் திளைக்கும் மனத்தை அடக்க வழி தேடிச் சிந்தித்து
இறை சிந்தனை, தியானம், யோகம், ஒழுக்கம் என்று
முறை பல உண்டென்று கண்டறிந்தார் நம் முன்னோர்.

எத்தனை வழி இருந்தும் மனதை அடக்க விழைகையில்
அத்தனை வழிகளையும் அயராது செயல்படுத்தும் வகையில்
சத்தான உடல் தன்னை வருத்தியும் திருத்தியும் இயங்கப்
பித்தான மனத்தின் கட்டளை தேவையன்றோ!

அவன் அருளால் அவன் அடி பணிந்து என்ற ஆழ்வாரின்
தவச் சொல் போல் வேண்டும் மனதின் துணை நமக்கு
மனதைக் கட்டுப்படுத்த ஆயின் எவ்வாறு இயலும் இது?
மனமே மனம் வைத்தால் மட்டுமே சாத்தியம் இது!

வேண்டும் பொருளை நமக்கு வழங்க வேண்டுவோம்
நாம் இறைவனிடம் அவன் குடியிருக்கும் கோவில் சென்று
மனதைக் கட்டுப்படுத்த வேண்டுவோம் நாம் மனதிடமே* 
மனம் ஒரு கோவில் என்று கவிஞர் கூறியது இதனால்தானோ! 

மனதிடம் - மனத்திடம், மனோதிடம் (மன உறுதி) என்று இருவகையிலும் பொருள் கொள்ளலாம்.