யானையைப் பார்க்கும்போது
அப்பா நினைவு வராமல் போவதில்லை
யானை போல் உருவோ வலுவோ
கொண்டவர் இல்லை என் தந்தை
கண்டதில்லை அவரிடம் நான்
யானையின் நினைவாற்றலையும்,
என் பிள்ளைப் பருவத்தில் அவர் எனக்கு
அன்புடன் வாங்கித் தந்த மரயானை பொம்மை
மென் கயிற்றில் அதைக் கட்டி இழுத்து
ஊர்வலம் அழைத்துச் சென்ற
என் குழந்தைக் குதூகலம்
இன்றும் உளது என் மனதில் பதிவாக.
கனிவுடன் வளர்த்த தந்தை
பரிந்து அளித்த யானை
வனவிலங்குகளின் அரசன் என்று
அறிந்தேன் நான் பின்னாளில் - ஆனால்
அன்றே அமர்ந்து விட்டது யானை
என் மன அரியணையில் அரசனாய்.
எப்போது நோக்கினாலும் ஓர் கணமாவது
தப்பாமல் என்னைச் சொக்க வைக்கும் யானை
கற்பனைக் கதைகளிலும் அதுவே
என் விருப்பப் பாத்திரம்
சற்றே அதைத் தவறாய்ச் சித்தரித்தாலும்
சட்டென்று புண்ணாகும் என் மனம்.
யானை பற்றிய மொழிகளில் எனக்குப் பிடித்தது
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது
சாணை பிடித்த கத்தி போல் கூராய்ப் பதிந்தது
இம்மொழி என் மனதில் என் மறைவுக்குப் பின்னும்
அப்படி ஓர் பெயர் எனக்கு இருக்க வேண்டும்
என்ற பேராசை இலக்கை ஏற்படுத்தி!



