Sunday, June 28, 2026

52. பெட்டகத்தின் சிரிப்பு

போட்டதெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் போல்
போடப் போட ஏற்று  என்றும் நிரம்பி வழியாத
ரகசியப் பெட்டகம் ஒன்று உளது என்னிடம்
கவிழ்த்தேன் அதை ஒரு நாள் ஒரு பொருள் தேடி.

போட்டு வைத்த பொருள் கிட்டவில்லை என் தேடலில்
கேட்காத கேள்விக்கு விடை போல் வந்தன
வேண்டாத பொருட்கள் பலவும் வரிசையாய் 
தோண்டத் தோண்ட மீண்டும் மீண்டும்.

குன்றாய்க் குவிந்த குப்பைகள் மலைப்பைத் தந்தன
எங்ஙனம் அவை இடம் பெற்றன இப் பெட்டகத்துக்குள்
என்ற வினாவை என்னுள் எழுப்பின.

போட்டு வைத்த மதிப்புப் பொருள் மாயமாய் மறைந்திட
ஓட்டை உடைசல்கள் நாட்டியம் ஆடி நகைத்தன.

பெட்டகத்தைக் கடிந்தேன் அதன் பொறுப்புத் துறப்புக்காக
'முட்டாளே தவறு எனதில்லை' என்றது பெட்டகம் கோபமாய்
'எங்கோ பார்த்தபடி நீ என்னுள் போட்ட பொருள் பலவும்
அங்கே தரையில் விழுந்து சிதறியதை அறியாய் நீ' என்றது. 

'சேர்ந்த குப்பைகள் நீ சேமித்து வைத்தவைதான் 
ஆழ்ந்த சிந்தனையில் நீ இருக்கும்போது - உன்
சிந்தனைகளைச் சேமிக்க என்னைத் திறந்து வைப்பதால்
சொந்தமாக வந்து என்னுள் துயிலும் பல குப்பைகளும்.

'ஈதறியா நீ உன் சிற்றறிவு கொண்டு என்னைச் சந்தேகித்து
தீதறியா என் மீது போடுகிறாய் பழி அனைத்தும்!
உன் நலம் கருதி நான் கூறும் அறிவுரையைக் கேட்பாய்
உன் செவிப்பறையை மூடாமல் கவனமாய்.

'எனக்குள் ஒரு பொருளை நீ சேர்க்க விழைகையில் 
கவனம் எனும் குணத்தின் துணை கொள் தவறாமல்
குப்பைகளும் எனக்குள் அடைக்கலம் பெறும் அவ்வப்போது
தப்பாமல் அவற்றை அகற்றி விடு தொடர் செயலால்.' 

பெட்டகத்துடன் நான் பேசித் தோற்றதை முற்றுமாய்
ஒட்டுக் கேட்ட என் மடிக்கணினி நகைத்தது
ஒலி எழுப்பிச் சிரித்தும் ஒளிக் கதிரால் தன்
களிப்பைப் பலர் அறியப் பறை சாற்றியும்.

'என் நினைவுப் பெட்டகத்தின் பெருமை அறிவீர் எசமானரே!
என்றோ நீர் சேமித்த பொருளையும் உமக்களிக்கும் 
கண நேரத்தில் தன்னுள்ளே தேடி எடுத்து வந்து
கண்பார்வை தேவையில்லை அதன் தேடலுக்கு!'

ஏளனமாய்ப் பேசியது என் மடிக்கணினி.

'ஏன் இந்த வீண் பெருமை உனக்கு என் மடியில்
சேய் போல் தஞ்சம் அடைந்திருக்கும் உனக்கு?
உன்னிடம் சேமித்த பொருளைத் தேடி எடுக்க
நான் படும் பாட்டை நானே அறிவேன்'

என்றேன் என் கோபத்தை வெளிப்படுத்தி. 

'காரணம் நீர்தான் புரவலரே! உம் நினைவுப் பெட்டகம்
தீர உரைத்தது போல் கவனத்துடன் செயல்படப் பழகுவீர்
தேடிய பொருள் உடன் கிடைக்கும் உம் நினைவுப் பெட்டியிலும்
உம் மடியில் கிடக்கும் இந்தக் கணினிப் பெட்டகத்திலும்'

பதிலடி கொடுத்தது மடியில் கிடந்த கணினி சற்றும் மயங்காமல்!

51. உள்ளே வெளியே

உள்ளே
ஒரு பெண்ணின் தீனமான அழுகுரல்
முகமூடி மனிதர்களின் பரபரப்பு அசைவுகள்
கைகளில் ஆயுதங்களுடன்

வெளியே
கூண்டில் அடைபட்ட புலிகளாய்க்
குறுக்கும், நெடுக்கும் அலைந்து
கையைப் பிசைந்து நிற்கும் உறவுகள்

உள்ளே
சன்னமான குரலில் இன்னொரு அழுகுரல்
முன்பு ஒலித்த அழுகுரலை அடக்கி.
முகமூடி மனிதர்களின் முறுவல்களை
முகமூடிகள் விழுங்கி விடக்
கண்கள் வழியே வெளிப்படும் மலர்ச்சி

வெளியே
விடுதலை பெற்ற கூண்டுப் புலிகள்
கவலை மேகங்கள் கலைந்த முகங்களுடன்
நற்செய்தி தாங்கி வெளி வரப் போகும்
மருத்துவரின் வருகையை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்.

Sunday, June 14, 2026

50. கேட்டதும், பெற்றதும்

எழுதுகோலால் ஏட்டைப் பலமுறை சிதைத்து
கடும் தவம் செய்த என் கொடுமை பொறுக்காமல் 
உருக்கொண்டு என் முன் தோன்றினாள் கவிதைத்தாய்.
வரமென்ன வேண்டும் கேளென்றாள் கனிவாக.

வாரம் ஒரு கவிதை வேண்டுமென்று பணித்தார்
வாரத் துவக்க நாள் மாலைக் கூட்டத்தில்
சாரமுள்ள கவிதைகளை நானும் கவிதைச்
சாரலுக்கு வழங்க அருளென்று வேண்டினேன்.

கவிதைத்தாய் யோசித்தாள் கண்மூடி
கவிதை எழுதுவோர்தான் கண்மூடிச் சிந்திப்பர்
கவிதைத் தாயுமா இப்படி என்று வியந்து
கவலையுடன் காத்திருந்தேன் கண் கொட்டாமல்.

'கேட்ட வரம் உனக்கருள விருப்பம்தான் எனக்கு
நாட்டமுடன் கவி எழுத நீ விரும்புவதை ஏற்று' என்றவள்
மேட்டுவளையைப் பார்த்து சற்றே சிந்தித்தபின்
போட்டுடைத்தாள் ஓர் உண்மையை நான் அறிய.

'இறைவன் உனைப் படைத்தான் உடலளித்து,
மறை பொருளாய்ப் பல்வேறு சக்தியும் உடனளித்து
நிறைவாய்ச் சிந்திக்கும் திறனும் அவற்றில் ஒன்று
குறை ஒன்றும் வைக்கவில்லையே அவன் உனக்கு!

அற்புத விளக்கைத் தேய்த்தால் ஆங்கே
சட்டெனத் தோன்றி எசமானரின் கட்டளையைத்
தட்டாமல் நிறைவேற்றும் பூதம் போல் - கை
கட்டி நிற்கும் உன் சிந்தனைதான் சற்றே அதைத் தேய்த்தால்.

கவிதை வித்திடும் உன் சிந்தனையைச் சுண்டினால்
புவியில் புதைந்து மரமாய் விரியக் காத்திருக்கும் விதை போல்.
வித்துக்கள் முளை விட்டு மரமாகி விழுது விட்டு
சத்துள்ள கவிதைகளாய் ஊஞ்சலாடும் உலகில்.

என் வரம் தேவையில்லை உன் சிந்தையில் கவி பிறக்க
உன் உள்ளிருக்கும் சக்தியே உனை இயக்கி -  உன்
சிந்தனையில் உருவாக்கும் ஒரு கருவை - அதன் எழுத்துருவம்
உந்தன் புகழை உரக்கக் கூறும் இவ்வுலகுக்கு.'

கவிதைத்தாயின் பேச்சில் கனிவில்லை என்றாலும்
கடிய உண்மையை அவள் உரைத்ததை உணர்ந்து 
கண் விழித்தேன் நள்ளிரவில் துயில் நீங்கி - மீண்டும்
கண் துயிலுமுன் கவிதையாய்ப் பதித்தேன் அவள் உரையை.

 


Tuesday, June 9, 2026

49. Global Warming!

ஆறு பருவங்களாய்
ஆண்டைப் பிரித்தார் ஆன்றோர்,
இளவேனில், முதுவேனில்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி என.


அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும்
ஆதிக்கப் பேரரசன் போல்,
மற்ற பருவங்களின்  பெரும்பகுதியைத்
தனதாக்கிக் கொண்டு,
ஆதிக்கம் செலுத்துகிறது, 
முதுவேனில் எனும் கொடிய கோடை! 




48. எனக்காக!

 எங்கோ பிறந்து
கன்றீந்து பாலுவக்கும்
தன்னலம் கருதாப்
பசுக்களும்,

உறக்கம் துறந்து
லாரிகளில் பால் சுமந்து
விரதம் காக்கும்
ஓட்டுனர்களும்
,

இரவு பகல் மாறி வந்து
இயந்திரங்களை இயக்கி,
பால்தனைப் பதப்படுத்தி,
பைகளில் திணித்தணிப்பும்
திறம் பெற்ற தொழிலாளரும்
,

பின்தூங்கி முன்னெழுந்து
முன்காலைக் குளிர் பொறுத்து
லாரி வரும் வரை
  காத்திருந்து
பாக்கெட்களைச் சுமந்து வரும்
ஊழியரும்

இணைந்து வழங்குகிறார்கள்,
என் காலைக் காப்பியை!



Saturday, April 11, 2026

47. கவிதை கைவரும்?

 காலையில் எழுந்ததும் கவிதையா?

காப்பி குடித்துத்தான் பழக்கம் எனக்கு 

கவிதை படித்துப் பழகுகிறேன் இனி 

காப்பி குடித்துப் பழகியவர்கள் நாளடைவில் 

காப்பி போடவும் கற்றுக் கொள்வது போல் 

கவிதை படித்துப் பழகினால் பலநாள் 

கவிதை எழுதுவதும் கைவரலாம் ஒருநாள்!

Wednesday, March 4, 2026

46. சிரித்து வாழ வேண்டும் - 2

 சிரித்து வாழ வேண்டும்

துன்பக் கேணியில் ஊறி வரும் கண்ணீர்,

இன்பத்திலும் பெருகி வரும் பன்னீராய்.

இன்பத்தில் அழுவது நிகழுமென்றால்,

துன்பத்தில் சிரிப்பது இயலாதோ?

 

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்;

மேடுபள்ளம் அது கொண்ட நடனம்.

மேட்டில் ஏறுகையில் களிப்பில் மிதப்பவர்,

பள்ளத்தில் சரிகையில் பரிதவிப்பது ஏனோ?

  சிரித்து வாழ வேண்டும்


துன்பம் நேர்கையில் சிரி என்றார்

அன்பும் அறனும் பாதை என்ற வள்ளுவர்.

இன்பத்தில் இயல்பாக வரும் நகை

துன்பத்திலும் துணைநிற்றல் தலை

 

உழைப்பில் விளைவது உயர்வு – உடல்

களைப்பில் சுரப்பது வியர்வை – மனச்

சோர்வில் பிறப்பது அயர்வு – நல்

சிரிப்பில் தொலைவது சோர்வு