Wednesday, March 4, 2026

46. சிரித்து வாழ வேண்டும் - 2

 சிரித்து வாழ வேண்டும்

துன்பக் கேணியில் ஊறி வரும் கண்ணீர்,

இன்பத்திலும் பெருகி வரும் பன்னீராய்.

இன்பத்தில் அழுவது நிகழுமென்றால்,

துன்பத்தில் சிரிப்பது இயலாதோ?

 

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்;

மேடுபள்ளம் அது கொண்ட நடனம்.

மேட்டில் ஏறுகையில் களிப்பில் மிதப்பவர்,

பள்ளத்தில் சரிகையில் பரிதவிப்பது ஏனோ?

  சிரித்து வாழ வேண்டும்


துன்பம் நேர்கையில் சிரி என்றார்

அன்பும் அறனும் பாதை என்ற வள்ளுவர்.

இன்பத்தில் இயல்பாக வரும் நகை

துன்பத்திலும் துணைநிற்றல் தலை

 

உழைப்பில் விளைவது உயர்வு – உடல்

களைப்பில் சுரப்பது வியர்வை – மனச்

சோர்வில் பிறப்பது அயர்வு – நல்

சிரிப்பில் தொலைவது சோர்வு

45. சிரித்து வாழ வேண்டும் - 1

 சிரித்து வாழ வேண்டும்!

விடாது கருப்பு என்பது போல்

அடாது தொல்லைகள் துரத்தும்போது

சிரித்து வாழ்வது எப்படி என்று

சீற்றம் கொள்ளும் மானிடரே!

எண்ணிப் பாரும் என் நிலையை!

உங்களுக்கென்ன?

துன்பம் வந்தால்

அழுது விட்டுப் போய் விடுவீர்கள்.

ஆனால் என் நிலைமை?

துன்பங்களும், சோர்வுகளும்

புயல் போல் நெஞ்சை அலைக்கழித்தாலும்

என் உணர்வுகள்

என் உதட்டில்

புன்னகையாகத்தான் வெளிப்பட வேண்டும்!

காலையில் எழுந்து பல் துலக்கும்போது

என் நிலையை எண்ணிப் பார்த்தால்

நீங்களும் சிரித்து வாழத் தொடங்குவீர்கள்

நான் ஒரு பற்பசை விளம்பர மாடல்!



44. மூத்தோர் சொல் கேள் - 2

 மூத்தோர் சொல் கேள் 


மூத்தோர் சொல் அமுதம் என்றதோர் நல்மொழியை

யாத்தோரே அம்மூத்தோர்தானே என்று வாதிட்டு – அதை

ஏற்காத சுயசிந்தனை இயல்பல்ல, இறுமாப்பின் வெளிப்பாடு

பார்க்க இயலும் இன்றும் இவ்வகை மனிதரை இவ்வையகத்தில்..

 

தம்பின்னோர் தம் பேச்சை ஏற்காமல் போகையில்

தம் சொல் அவையேறாச் சீற்றம் கொண்டு குமுறும்

மாந்தர் மறப்பர் முன்னோர் சொல்லை மனதில்

ஏந்தாமல் தாம் செயல்பட்ட நிகழ்வுகளின் சுவடுகளை   

 

அனுபவம் புதுமை என்பார் சிலர், ஆயின் தேடின் காண்போம் 

அதன் வேர்கள் புதைந்திருப்பது கடந்த காலத்திலென்று.

பெற்ற அனுபவம் வழங்கும் கற்றலை என்பதால்

உற்ற துணையாவது நம் முன்சென்றோர் சொல்லன்றோ?

 

சென்றார் அவர் பல இடம், கண்டார் பல பொருள் 

வென்றார் பல முயற்சிகளில், அத்துடன் தோற்றும்

நின்றார் அவ்வப்போது, இருவகை நிகழ்விலும்

நன்றாம் அவர் பெற்ற அனுபவம் எனும் அறிவு   

43. மூத்தோர் சொல் கேள் - 1

 மூத்தோர் சொல் கேள்!


என் தந்தை சொல் எனக்கு வேம்பு

என் மகன் என் சொல்லை ஏற்காவிடில்,

அது அவன் வீம்பு!

 

கடந்த பல தலைமுறைகள் கண்டறிந்த

விஞ்ஞான உண்மைகளின் மேல்

அடுக்கடுக்காய்க் கட்டியதால் நாம் பெற்றவை

கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு.

 

தந்தையின் செல்வத்தைத் தனதாக்கிக் கொண்டு

அதை மேலும் பெருக்குவதுதான் அறிவு.


மூத்தோர் சொல் எனும் செல்வத்தை சுவீகரித்து

அதில் நம் அனுபவ அறிவைச் சேர்த்து

அதை மெருகூட்டுவதே பகுத்தறிவு!

42. ஒரு புகைப்படத்தின் அடிக்குறிப்பு

ஒரு புகைப்படத்தின் அடிக்குறிப்பு  


நாய்க்காதுக்கு மேட்ச் ஆன
தொப்பி விளம்பரத்துக்கோ
நாய்க்கான ஷாம்பு விளம்பரத்துக்கோ
நான் போஸ் கொடுக்கும் புகைப்படமல்ல இது
இது என் குடும்பப் புகைப்படம்தான்
இது நாயல்ல என் சேய்
பால் பவுடர் கிடைப்பதில்லை
முலைப்பால் கொடுத்து
என் மார்பழகை இழக்க
எனக்கு விருப்பமில்லை
குழந்தையுடன் பிரச்னையும்
இரட்டையாகப் பிறப்பதால்
குழந்தையைத் தவிர்த்துக்
குட்டிநாயைத் தத்தெடுத்தேன்
ஆமாம், இது என்
குடும்பப் புகைப்படம்

41. ஆறிய காதல்!

 ஆறிய காதல்


அன்று இப்படித்தான்
நெளிந்து,
தோளில் இடித்து,
மார்பு காட்டி
என்னை மயக்கினாய்
அது நம் முதல் இரவில்
சென்று முடிந்தது..
இன்று போதைக்கு மதுவும்,
போதாதற்கு மகளும்
பக்கத்தில் இருப்பதால்,
சற்றுத் தள்ளியே அமரடி கண்ணே!
நான் உனக்கு இப்போது
எப்போது வேண்டுமானாலும்
இழுத்து அருந்தக் கூடிய
கிணற்று நீர்தானே?

40. முறையீடு

 அவசர கால அத்துமீறல்களை விசாரிக்கிறார்களாமே!

\ஞாயிற்றுக்கிழமையின் நெருக்கடியில்

அவசரகாலப் பிரகடனம் செய்து 

என் தலை மீதிருந்த பொக்கிஷத்தை 

அத்து மீறி அபகரித்து

அங்கஹீனம் செய்து விட்ட 

சலூன்காரரின் அக்கிரமத்தை

விசாரிக்க யாரும் இல்லையா?

(1977ஆம் ஆண்டு எழுதப்பட்டது)