போட்டதெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் போல்
போடப் போட ஏற்று என்றும் நிரம்பி வழியாத
ரகசியப் பெட்டகம் ஒன்று உளது என்னிடம்
கவிழ்த்தேன் அதை ஒரு நாள் ஒரு பொருள் தேடி.
போட்டு வைத்த பொருள் கிட்டவில்லை என் தேடலில்
கேட்காத கேள்விக்கு விடை போல் வந்தன
வேண்டாத பொருட்கள் பலவும் வரிசையாய்
தோண்டத் தோண்ட மீண்டும் மீண்டும்.
குன்றாய்க் குவிந்த குப்பைகள் மலைப்பைத் தந்தன
எங்ஙனம் அவை இடம் பெற்றன இப் பெட்டகத்துக்குள்
என்ற வினாவை என்னுள் எழுப்பின.
போட்டு வைத்த மதிப்புப் பொருள் மாயமாய் மறைந்திட
ஓட்டை உடைசல்கள் நாட்டியம் ஆடி நகைத்தன.
பெட்டகத்தைக் கடிந்தேன் அதன் பொறுப்புத் துறப்புக்காக
'முட்டாளே தவறு எனதில்லை' என்றது பெட்டகம் கோபமாய்
'எங்கோ பார்த்தபடி நீ என்னுள் போட்ட பொருள் பலவும்
அங்கே தரையில் விழுந்து சிதறியதை அறியாய் நீ' என்றது.
'சேர்ந்த குப்பைகள் நீ சேமித்து வைத்தவைதான்
ஆழ்ந்த சிந்தனையில் நீ இருக்கும்போது - உன்
சிந்தனைகளைச் சேமிக்க என்னைத் திறந்து வைப்பதால்
சொந்தமாக வந்து என்னுள் துயிலும் பல குப்பைகளும்.
'ஈதறியா நீ உன் சிற்றறிவு கொண்டு என்னைச் சந்தேகித்து
தீதறியா என் மீது போடுகிறாய் பழி அனைத்தும்!
உன் நலம் கருதி நான் கூறும் அறிவுரையைக் கேட்பாய்
உன் செவிப்பறையை மூடாமல் கவனமாய்.
'எனக்குள் ஒரு பொருளை நீ சேர்க்க விழைகையில்
கவனம் எனும் குணத்தின் துணை கொள் தவறாமல்
குப்பைகளும் எனக்குள் அடைக்கலம் பெறும் அவ்வப்போது
தப்பாமல் அவற்றை அகற்றி விடு தொடர் செயலால்.'
பெட்டகத்துடன் நான் பேசித் தோற்றதை முற்றுமாய்
ஒட்டுக் கேட்ட என் மடிக்கணினி நகைத்தது
ஒலி எழுப்பிச் சிரித்தும் ஒளிக் கதிரால் தன்
களிப்பைப் பலர் அறியப் பறை சாற்றியும்.
'என் நினைவுப் பெட்டகத்தின் பெருமை அறிவீர் எசமானரே!
என்றோ நீர் சேமித்த பொருளையும் உமக்களிக்கும்
கண நேரத்தில் தன்னுள்ளே தேடி எடுத்து வந்து
கண்பார்வை தேவையில்லை அதன் தேடலுக்கு!'
ஏளனமாய்ப் பேசியது என் மடிக்கணினி.
'ஏன் இந்த வீண் பெருமை உனக்கு என் மடியில்
சேய் போல் தஞ்சம் அடைந்திருக்கும் உனக்கு?
உன்னிடம் சேமித்த பொருளைத் தேடி எடுக்க
நான் படும் பாட்டை நானே அறிவேன்'
என்றேன் என் கோபத்தை வெளிப்படுத்தி.
'காரணம் நீர்தான் புரவலரே! உம் நினைவுப் பெட்டகம்
தீர உரைத்தது போல் கவனத்துடன் செயல்படப் பழகுவீர்
தேடிய பொருள் உடன் கிடைக்கும் உம் நினைவுப் பெட்டியிலும்
உம் மடியில் கிடக்கும் இந்தக் கணினிப் பெட்டகத்திலும்'
பதிலடி கொடுத்தது மடியில் கிடந்த கணினி சற்றும் மயங்காமல்!


