Tuesday, June 9, 2026

49. Global Warming!

ஆறு பருவங்களாய்
ஆண்டைப் பிரித்தார் ஆன்றோர்,
இளவேனில், முதுவேனில்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி என.


அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும்
ஆதிக்கப் பேரரசன் போல்,
மற்ற பருவங்களின்  பெரும்பகுதியைத்
தனதாக்கிக் கொண்டு,
ஆதிக்கம் செலுத்துகிறது, 
முதுவேனில் எனும் கொடிய கோடை! 




48. எனக்காக!

 எங்கோ பிறந்து
கன்றீந்து பாலுவக்கும்
தன்னலம் கருதாப்
பசுக்களும்,

உறக்கம் துறந்து
லாரிகளில் பால் சுமந்து
விரதம் காக்கும்
ஓட்டுனர்களும்
,

இரவு பகல் மாறி வந்து
இயந்திரங்களை இயக்கி,
பால்தனைப் பதப்படுத்தி,
பைகளில் திணித்தணிப்பும்
திறம் பெற்ற தொழிலாளரும்
,

பின்தூங்கி முன்னெழுந்து
முன்காலைக் குளிர் பொறுத்து
லாரி வரும் வரை
  காத்திருந்து
பாக்கெட்களைச் சுமந்து வரும்
ஊழியரும்

இணைந்து வழங்குகிறார்கள்,
என் காலைக் காப்பியை!



Saturday, April 11, 2026

47. கவிதை கைவரும்?

 காலையில் எழுந்ததும் கவிதையா?

காப்பி குடித்துத்தான் பழக்கம் எனக்கு 

கவிதை படித்துப் பழகுகிறேன் இனி 

காப்பி குடித்துப் பழகியவர்கள் நாளடைவில் 

காப்பி போடவும் கற்றுக் கொள்வது போல் 

கவிதை படித்துப் பழகினால் பலநாள் 

கவிதை எழுதுவதும் கைவரலாம் ஒருநாள்!

Wednesday, March 4, 2026

46. சிரித்து வாழ வேண்டும் - 2

 சிரித்து வாழ வேண்டும்

துன்பக் கேணியில் ஊறி வரும் கண்ணீர்,

இன்பத்திலும் பெருகி வரும் பன்னீராய்.

இன்பத்தில் அழுவது நிகழுமென்றால்,

துன்பத்தில் சிரிப்பது இயலாதோ?

 

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்;

மேடுபள்ளம் அது கொண்ட நடனம்.

மேட்டில் ஏறுகையில் களிப்பில் மிதப்பவர்,

பள்ளத்தில் சரிகையில் பரிதவிப்பது ஏனோ?

  சிரித்து வாழ வேண்டும்


துன்பம் நேர்கையில் சிரி என்றார்

அன்பும் அறனும் பாதை என்ற வள்ளுவர்.

இன்பத்தில் இயல்பாக வரும் நகை

துன்பத்திலும் துணைநிற்றல் தலை

 

உழைப்பில் விளைவது உயர்வு – உடல்

களைப்பில் சுரப்பது வியர்வை – மனச்

சோர்வில் பிறப்பது அயர்வு – நல்

சிரிப்பில் தொலைவது சோர்வு

45. சிரித்து வாழ வேண்டும் - 1

 சிரித்து வாழ வேண்டும்!

விடாது கருப்பு என்பது போல்

அடாது தொல்லைகள் துரத்தும்போது

சிரித்து வாழ்வது எப்படி என்று

சீற்றம் கொள்ளும் மானிடரே!

எண்ணிப் பாரும் என் நிலையை!

உங்களுக்கென்ன?

துன்பம் வந்தால்

அழுது விட்டுப் போய் விடுவீர்கள்.

ஆனால் என் நிலைமை?

துன்பங்களும், சோர்வுகளும்

புயல் போல் நெஞ்சை அலைக்கழித்தாலும்

என் உணர்வுகள்

என் உதட்டில்

புன்னகையாகத்தான் வெளிப்பட வேண்டும்!

காலையில் எழுந்து பல் துலக்கும்போது

என் நிலையை எண்ணிப் பார்த்தால்

நீங்களும் சிரித்து வாழத் தொடங்குவீர்கள்

நான் ஒரு பற்பசை விளம்பர மாடல்!



44. மூத்தோர் சொல் கேள் - 2

 மூத்தோர் சொல் கேள் 


மூத்தோர் சொல் அமுதம் என்றதோர் நல்மொழியை

யாத்தோரே அம்மூத்தோர்தானே என்று வாதிட்டு – அதை

ஏற்காத சுயசிந்தனை இயல்பல்ல, இறுமாப்பின் வெளிப்பாடு

பார்க்க இயலும் இன்றும் இவ்வகை மனிதரை இவ்வையகத்தில்..

 

தம்பின்னோர் தம் பேச்சை ஏற்காமல் போகையில்

தம் சொல் அவையேறாச் சீற்றம் கொண்டு குமுறும்

மாந்தர் மறப்பர் முன்னோர் சொல்லை மனதில்

ஏந்தாமல் தாம் செயல்பட்ட நிகழ்வுகளின் சுவடுகளை   

 

அனுபவம் புதுமை என்பார் சிலர், ஆயின் தேடின் காண்போம் 

அதன் வேர்கள் புதைந்திருப்பது கடந்த காலத்திலென்று.

பெற்ற அனுபவம் வழங்கும் கற்றலை என்பதால்

உற்ற துணையாவது நம் முன்சென்றோர் சொல்லன்றோ?

 

சென்றார் அவர் பல இடம், கண்டார் பல பொருள் 

வென்றார் பல முயற்சிகளில், அத்துடன் தோற்றும்

நின்றார் அவ்வப்போது, இருவகை நிகழ்விலும்

நன்றாம் அவர் பெற்ற அனுபவம் எனும் அறிவு   

43. மூத்தோர் சொல் கேள் - 1

 மூத்தோர் சொல் கேள்!


என் தந்தை சொல் எனக்கு வேம்பு

என் மகன் என் சொல்லை ஏற்காவிடில்,

அது அவன் வீம்பு!

 

கடந்த பல தலைமுறைகள் கண்டறிந்த

விஞ்ஞான உண்மைகளின் மேல்

அடுக்கடுக்காய்க் கட்டியதால் நாம் பெற்றவை

கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு.

 

தந்தையின் செல்வத்தைத் தனதாக்கிக் கொண்டு

அதை மேலும் பெருக்குவதுதான் அறிவு.


மூத்தோர் சொல் எனும் செல்வத்தை சுவீகரித்து

அதில் நம் அனுபவ அறிவைச் சேர்த்து

அதை மெருகூட்டுவதே பகுத்தறிவு!