Wednesday, September 2, 2026

67. தலைப்புத் தாருங்கள்!

தெரிந்த பொருள் பற்றித் தெளிவாகப் பேசினால் யாம்
அறிந்த பொருள்தானே இது என்பீர் அலட்சியமாக
புதிய பொருள் பற்றிப் புரியும் வகையில் கூறினாலோ
புரியவில்லை எமக்கு இது என்று புறம் தள்ளுவீர்

அதனால்தான் கேட்கிறேன் தலைப்புத் தாருங்கள் என்று
இதமான என் பேச்சை இழித்து எதை நீங்கள் சொன்னாலும்
பதமாகச் சொல்வேன் ஒரு பதிலை உமக்கு உறைக்க
இது நீவிர் எனக்களித்த தலைப்புதானே என்பதைச் சுட்டி.

70. மனம், மனம் அது கோவிலாகலாம்!


உள்ளிருந்து உடலை இயக்கும் மனம் என்னும் மந்திர ரிமோட்
அளவில்லா ஆற்றல் கொண்ட உருவற்ற உயர்சக்தி ரோபோட்
கோவிலாகலாம் மனம் என்றார் கவிஞர் ஆனால் அதன்
தாவலால் நாம் படும் துன்பம் அடங்கா எக்கணக்கிலும்.

ஒன்றை விரும்பும் மனம் அதைக் கொள்ள உடலும்
நன்றாய்ச் செயல்படும் பாங்காய் கிட்டிய பயனைத்
துய்ப்பது உடல்தான் உண்மை ஆயின் தீப்பயன் எனும்
துன்பத்தை ஏற்பதும் உடல்தானன்றோ உலகில்!

ஆடச் சொல்லும் பாடச் சொல்லும் தேடச் சொல்லும் பல்பொருள்
ஓடச் சொல்லும் கடமை பொறுப்பு இவற்றைத் துறந்து
மேடு பள்ளமென்று உடல் விழுந்தும் எழுந்தும் படும்
பாடுகளுக்குப் பின்னிருப்பது இந்தப் பாழும் மனமன்றோ!

முற்பகல் இனிப்பைத் துய்க்கும் உடல் மனம் சொல்லி
பிற்பகல் படும் இன்னல் நீரிழிவு நோயின் தாக்கத்தால்
அத்தனைக்கும் ஆசைப்படும் மனத்தின் கட்டளைக்கு
மொத்தமாய்ப் பணிந்ததால் பெரும் துன்பம் உடலுக்கு.

மதம் கொண்ட யானையை அடக்குவார் அங்குசம் கொண்டு
மிதப்பில் திளைக்கும் மனத்தை அடக்க வழி தேடிச் சிந்தித்து
இறை சிந்தனை, தியானம், யோகம், ஒழுக்கம் என்று
முறை பல உண்டென்று கண்டறிந்தார் நம் முன்னோர்.

எத்தனை வழி இருந்தும் மனதை அடக்க விழைகையில்
அத்தனை வழிகளையும் அயராது செயல்படுத்தும் வகையில்
சத்தான உடல் தன்னை வருத்தியும் திருத்தியும் இயங்கப்
பித்தான மனத்தின் கட்டளை தேவையன்றோ!

அவன் அருளால் அவன் அடி பணிந்து என்ற ஆழ்வாரின்
தவச் சொல் போல் வேண்டும் மனதின் துணை நமக்கு
மனதைக் கட்டுப்படுத்த ஆயின் எவ்வாறு இயலும் இது?
மனமே மனம் வைத்தால் மட்டுமே சாத்தியம் இது!

வேண்டும் பொருளை நமக்கு வழங்க வேண்டுவோம்
நாம் இறைவனிடம் அவன் குடியிருக்கும் கோவில் சென்று
மனதைக் கட்டுப்படுத்த வேண்டுவோம் நாம் மனதிடமே* 
மனம் ஒரு கோவில் என்று கவிஞர் கூறியது இதனால்தானோ! 

மனதிடம் - மனத்திடம், மனோதிடம் (மன உறுதி) என்று இருவகையிலும் பொருள் கொள்ளலாம்.



Friday, August 14, 2026

65. விடுதலை!


அடிமைத் தளையிலிருந்து விடுதலை - சுதந்திரம்
அறியாமையிலிருந்து விடுதலை - கல்வி
சோம்பலிலிருந்து விடுதலை - உழைப்பு
வெறுப்பிலிருந்து விடுதலை - அன்பு
கோபத்திலிருந்து விடுதலை - சகிப்புத்தன்மை
தன்னலத்திலிருந்து விடுதலை - பிறர் நலம் பேணல்
வறுமையிலிருந்து விடுதலை - முன்னெடுப்பு
நோயிலிருந்து விடுதலை - கட்டுப்பாடான வாழ்க்கை
மனச்சோர்விலிருந்து விடுதலை - சிந்தனை மாற்றம்
விரக்தியிலிருந்து விடுதலை - தன்னம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை


Wednesday, July 22, 2026

63. சுய அறிமுகம்

 நாங்கள் வன்முறையை எதிர்ப்பவர்கள்
  -வலியவர்களுடன் மோதும்போது!
நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்பவர்கள்
  -கடமையைச் செய்பவர்களிடம்
நாங்கள் விட்டுக் கொடுக்கும் இயல்புடையவர்கள்
  -வேறு வழி இல்லாதபோது
நாங்கள் அநீதியை எதிர்ப்பவர்கள்
  -அது எங்களுக்கு நிகழும்போது
நாங்கள் நல்லவர்கள்
  -எங்களுடன் கொடியவர்களுடன் ஒப்பிடும்போது
நாங்கள் பொது உடைமைவாதிகள்
 -பிறர் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்
நாங்கள் தனிமனித உரிமைகளை மதிப்பவர்பள்
 -எங்கள் உரிமைகளை
நாங்கள் கடமை வீரர்கள்
 -நாங்கள் நினைத்ததை முடிப்பதில்
நாங்கள் பதவி ஆசை அற்றவர்கள்
 -சிவலோக, வைகுண்டப் பதவிகளில்
நாங்கள் ஏழைகள்
 -அறிவு, ஆற்றல், திறமை, நேர்மை இவற்றில்
நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்
 -உங்களிடம் சொன்னதை அல்ல
நாங்கள் கண்ணியமானவர்கள்
 -எங்கள் வேடங்கள் கலையாதவரை.
நாங்கள் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே!
அதனால் என்ன, தேர்தல்தான் முடிந்து விட்டதே!


62. நிபந்தனை

 வரதட்சிணை வாங்காமல்
வைரநகை வெள்ளிப் பத்திரம் கேட்காமல்
வாண வேடிக்கை வண்டி ஊர்வலம் வேண்டாமல்
விருந்து, வரவேற்பு வைபவங்கள் இல்லாமல்
வசதியற்ற பெண்ணை மணக்கத் தயார்
ஆனால், மாமனாரே!
வேலை மட்டும் வாங்கித் தர வேண்டும் எனக்கு!

61. புயல்

 






தென்றலின் கோபம்

மண்ணின் தளையிலிருந்து விடுபட முயலும்
மரங்களின் போராட்டம்

மனிதன் மீது இயற்கையின் படையெடுப்பு

கட்டிடங்களின் வலுவைச் சோதிக்கும் பரீட்சை

கண்ணுக்குப் புலப்படாத கண்ணகிகளின்
சாப விளைவு

எல்லா நீரும் ஒன்று சேர்ந்து உறவாடும்
குடும்ப வைபவம்

யாரோ நிறுத்த மறந்து விட்ட
இயற்கை எந்திரத்தின் வெடிப்பு

பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக
இயற்கையின் அனுதாப வெளிப்பாடு

பதுக்கல் தடுப்புச் சட்டத்துக்கு அஞ்சிப்
பதுக்கலிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட காற்று

மேடுபள்ளங்களை மாற்றி அமைக்கப் 
புவி அரசின் சோஷலிச முன்னெடுப்பு!

60. பசுமைப் புரட்சி

 நிகழ்காலப் பொய்களில் 
கடந்தகால உண்மைகளைப் புதைத்து
எதிர்கால லாபங்களை நினைத்து
வஞ்சனை விதைகளைத் தூவி
அவதூறு நீரைப் பாய்ச்சி
நியாய உணர்வுகளைக் களைந்து
வன்முறை உரத்தை இட்டு
சுயநலப் பயிர்கள் செழித்து வளர
மலர்ந்தது பசுமைப் புரட்சி.