தெருமுழுதும் பள்ளம் தோண்டிப் பலநாள்
மறுபாதையில் எம்மைச் செல்ல வைத்து
சிறு வாகனமும் செல்ல இயலா வீதியாக்கி
குறுக்கும் நெடுக்குமாய் ஊறும் பாம்புகள் போல்
குடிநீர்க் குழாய் அமைத்தார் அந்தோ!
வடியவில்லை சொட்டு நீரும் அதனின்று
பேருந்துக்குக் காத்திருப்போர் அயர்வு போக்கச்
சாரமாய் ஓர் குடை அமைத்தார் அவர் அமர - உடல்
சோராமல் காத்திருந்து பயணம் செய்வோம் நாம்
பேருந்தில் என்று காத்திருந்தார் பலர் அக்குடைக்கீழ்
ஊர்வலமாய் அழைத்துச் செல்லும் பேருந்து வரவில்லை
காரணம்தான் தெரியவில்லை அதற்கு ஆங்கே.
மின்சாரம் இல்லா ஊர் வாழ் மாந்தர்தம்
இன்னல் போக்கி ஊரின் இருள் நீக்கி ஒளியூட்ட
மின் கம்பம் பல நாட்டிக் கம்பிகளை இணைத்துத்
தன் வழியே மின்சாரம் பாய்ந்து வர வகை செய்தார்
என் சொல்ல அங்கே வரவில்லை மின்சாரம்
மின் தட்டுப்பாடு என்று காரணம் சொன்னார்.
கவிதைக்கு இலக்கணம் கூறும் யாப்பு எனும்
கடிதான நூலைப் பலநாள் முயன்று கற்றுக்
கவிதை பதியத் தாளெடுத்துப் பேனா முனை பதித்துச்
செறிவான கவி படைக்க அமர்ந்தேன் நான் ஆயின்
வரிசையாய் வந்து விழவில்லை சொற்கள் ஊறவில்லை
செறிவான கற்பனை என் மனக்கேணியில் என்பதால்


