அச்சம் தவிர் என்றுரைத்தான் தன் உயிரைத்
துச்சமாய் மதித்த மாகவி - ஆயினும்
அச்சம் துணைபுரியும் நன்மைகள் விளைந்து
அச்சில் சுழலும் இவ்வுலகம் செம்மை பெற.
கடன் கொடுத்து தவியவர் கேட்பார் தன்
கடனைத் திரும்பக் காலம் கடந்த நிலையில்
கடன் பெற்றார் மறுத்திடுவார் எளிதாய்த் தன்
கடனைக் காசில்லை என்ற காரணம் சொல்லி.
கடன் கொடுத்தார் கேட்பார் காலம் கனிந்ததும்
கடனுடன் வட்டியைச் சேர்த்துச் செலுத்த
கடன்பட்டார் கொடுத்திடுவார் காசைத் திரட்டி
அடகாய் ஆங்கே அவர் பொருள் இருந்ததால் அஞ்சி!
அண்டை வீட்டார் இல்லாத மனிதரில்லை அவருடன்
சண்டை போடாமல் வாழ்பவர் உண்டு தரணியில்
அந்நிலை எனக்கில்லை என் அண்டை எனக்கு
எண்ணொறாத் தொல்லை கொடுத்து வந்ததால்.
மறுபுறம் அவர்க்குண்டு மற்றோர் அண்டை வீடு
சிறு சச்சரவும் அவருடன் இல்லை என் அண்டைக்கு
குறுவாள் துணை கொண்டு குவலயம் ஆள்பவர் போல்
செருவுக்கு அஞ்சாத செம்பியர் அவர் என்பதால்.
நற்பண்பும் நல்லொழுக்கமும் நம் மனதில் பதிய
இன்சொலால் போதிப்பார் இனிய பண்புடையோர்
பின்கையால் அவர் சொல்லைப் புறம் தள்ளித்
தன் வழியே செல்வதே தரணியில் பலர் பண்பு.
அரசாங்கம் ஒன்றமைத்து உயர் அதிகாரம் அதற்களித்து
வளமாக இயற்றச் செய்வார் வரிசையாய்ச் சட்டம் பல
வட்டத்துள் அடங்காமல் திரியும் வல்லூறு குணத்தோரும்
கட்டத்தில் அடங்கிக் கட்டுப்பாடுடன் வாழ்வார் கண்டீர்!