சிறுவர்கள் நாங்கள் ஆற்று மணலில் விளையாடிக் களைத்து
கதிரவன் மறைந்ததும் தம் தம் வீடுகளுக்குத் திரும்புகையில்
நந்திபோல் நிற்கும் சாலை நடுவே ஒரு சிறு கோவில்
தொந்தி கணபதியின் திருக்கோவில்.
கும்பிட்டுத் தலையில் கொட்டிக் கொண்டு வலம் வந்து
தம் தம் வழியே பிரிவோம் நண்பர்கள் இல்லங்கள் நோக்கி
விரைவில் வழிபட்டு மனநிறைவுடன் செல்ல வைக்கும்
பிறைசூடன் மைந்தனின் குறு கோவில்.
பெருமாள் சிவன் துர்க்கை மாரியம்மன் ஐயனாரென்று
பரம்பரைப் பழக்கத்தில் வழிபடும் அனைவர்க்கும்
நெருக்கமாய் இருக்கும் சிற்றெலி வாகனன் முகத்தில்
களிறு கை கொண்டவன் சிறு கோவில்.
எதையோ செய்து எப்படியோ வாழ்ந்தாலும் தம் மனதில்
விதையாய் இருக்கும் இறைப்பற்றை நீரூற்றி வளர்ப்போருக்கு
நம்பிக்கை அளிக்கும் வாழ்வில் எந்நாளும் எப்பொழுதும்
தும்பிக்கை நாயகன் திருக்கோவில்.

No comments:
Post a Comment