நாயைக் கண்டால் உடனே
கல்லொன்றைக் கண்டெடுத்து
அதன் காலை உடைக்கும்
எண்ணத்தைக்
கை விடு.
இது ஜீவகாருண்யம்
சம்பத்தப் பட்டதல்ல
பரிணாமத் தத்துவம்.
ஏனெனில்-
இன்று நாயை அடித்துக் களித்து
நீ விதைக்கும் கொடுமை விதை
உன் சந்ததிகள் காலத்தில்
உன்போன்ற சக மனிதர்களையும்
கல்லால் அடித்துக் கொல்லும்
கொடுமையை
நீதியாக்கிச்
சட்டமியற்றும்
கொடுமையாக வளரும்
இந்தக் கொடிய விதைகள்
ஏற்கெனவே
வேறு இடங்களில் முளைத்துச்
சோதனையில்
தேறியவைதான்.
எனவே இந்த விதைகள்
வீரியம் வாய்ந்தவை.
அதனால்தான் சொல்கிறேன்.
நாயைக் கல்லால் அடிக்காதே.
கவலையினால் சொல்கிறேன்
கருணையினால் சொல்ல
நான் ஒன்றும் புத்தனில்லை.
வீரச் செங்குட்டுவனால்
வீழ்த்தப்பட்ட வட மன்னர்
கனகரும் விசயரும்
கோவலக் கண்ணகிக்குக்
கோயிலெடுக்க,
இமயத்திலிருந்து
எடுத்த கல்லைக்
கன்னியாகுமரி தாண்டிக்
கேரளம் வரைத்
தலையிலேயே
சுமந்து வந்த
'வரலாற்றைக்'
கேள்வி கேட்காமல்
நம்பும்
பகுத்தறிவு வாதி!
மாண்புமிகு மந்திரியின்
மானம் போக்க வந்த மகன்
இறக்குமதிக் காரை
வீதியில் வேகச் சோதனை
செய்தபோது
காரில் அடிபட்டு
இறந்துபோன
கன்றை நினைத்துக்
கதறிய தாய்ப் பசுவுக்கு
கேட்காமலேயே
நீதி வழங்கினார்
மனுநீதி மந்திரி -
விழா ஒன்று எடுத்து
வைக்கோல் கன்றைப்
பரிசளித்து!