Thursday, October 11, 2012

22. காத்திருத்தல்


நாராய் நாராய்
செங்கால் நாராய்!
எங்கிருந்து வருகிறாய்?
எங்கே போகிறாய்?

நீ செல்லும் வழியில்
எங்கள் நல்லமைச்சர் நம்பியைப்
பார்த்தால் சொல்.

ஆற்றின்மீது போட்ட பாலம்
ஆறு மாதமாய்
மூடியே இருக்கிறது.

அவர் வந்துதான்
திறக்க வேண்டுமாம்!

21. ஓயாத அலைகள்


சலிக்காமல் திரும்பத் திரும்பக்
கரையில் மோதும் அலைகளே!
நீங்கள் கேட்பதென்ன, பெறுவதென்ன?

கைநீட்டி மீண்டும் மீண்டும்
கதறி கதறிக் கேட்டாலும்
நாங்கள்
கைகொட்டி ரசித்து
வேடிக்கைதான் பார்ப்போமே தவிர
நீங்கள் கேட்பதைக்
கொடுத்துவிடப் போவதில்லை.

எனவே
வறட்டு இரைச்சல் போட்டு
வீணாக மோதுவதைக் கைவிட்டுக்
கரை கடந்து
உள்ளே வந்தால்
வேண்டியதை
எடுத்துச் செல்லலாம்.

20. நான் புத்தனில்லை


நாயைக் கண்டால் உடனே
கல்லொன்றைக் கண்டெடுத்து
அதன் காலை உடைக்கும்
எண்ணத்தைக்
கை விடு.

இது ஜீவகாருண்யம்
சம்பத்தப் பட்டதல்ல
பரிணாமத் தத்துவம்.

ஏனெனில்-

இன்று நாயை அடித்துக் களித்து
நீ விதைக்கும் கொடுமை விதை
உன் சந்ததிகள் காலத்தில்
உன்போன்ற சக மனிதர்களையும்
கல்லால் அடித்துக் கொல்லும்
கொடுமையை
நீதியாக்கிச்
சட்டமியற்றும்
கொடுமையாக வளரும்

இந்தக் கொடிய விதைகள்
ஏற்கெனவே
வேறு இடங்களில் முளைத்துச்
சோதனையில்
தேறியவைதான்.

எனவே இந்த விதைகள்
வீரியம் வாய்ந்தவை.

அதனால்தான் சொல்கிறேன்.
நாயைக் கல்லால் அடிக்காதே.

கவலையினால் சொல்கிறேன்
கருணையினால் சொல்ல
நான் ஒன்றும்  புத்தனில்லை.

Wednesday, October 10, 2012

19. மொழிப் பிரச்னை


காலையில் கண் விழித்ததும்
கலகவென்று உரையாடும்
குருவிகளைக்
காண்கிறேன்.

எவ்வளவு முயன்றும்
அவை பேசும் மொழி
எனக்குப் புரிவதில்லை

அவற்றின் மொழியைக் கற்க
ஒரு வழிதான்.

நானும் அந்தக் குருவிகள் போல்
சுதந்திரமாய் உணர்ந்து
கீசுகீசென்று
அவை மொழியில்
பேசிப் பழக வேண்டியதுதான்.

ஆனால் அப்போது
என் மொழி
புரியாமல் போய் விடும்
பிற மனிதர்க்கு!

18. தன்னிலை விளக்கம்


சிற்பி செதுக்கிய கல்லைத்
தெய்வமென்று நம்பிக்
கும்பிடும்
குருட்டு நம்பிக்கைச்
சாதியில்லை நான்.

வீரச் செங்குட்டுவனால்
வீழ்த்தப்பட்ட வட மன்னர்
கனகரும் விசயரும்
கோவலக் கண்ணகிக்குக்
கோயிலெடுக்க,
இமயத்திலிருந்து
எடுத்த கல்லைக்
கன்னியாகுமரி தாண்டிக்
கேரளம் வரைத்
தலையிலேயே
சுமந்து வந்த
'வரலாற்றைக்'
கேள்வி கேட்காமல்
நம்பும்
பகுத்தறிவு வாதி!

17. மனுநீதி மந்திரி


மாண்புமிகு மந்திரியின்
மானம் போக்க வந்த மகன்
இறக்குமதிக் காரை
வீதியில் வேகச் சோதனை
செய்தபோது
காரில் அடிபட்டு
இறந்துபோன
கன்றை நினைத்துக்
கதறிய தாய்ப் பசுவுக்கு
கேட்காமலேயே
நீதி வழங்கினார்
மனுநீதி மந்திரி -
விழா ஒன்று எடுத்து
வைக்கோல் கன்றைப்
பரிசளித்து!

16. விடிவை நோக்கி


இருட்போர்வையை மெல்ல விலக்கி
வெளிச்சத்தைத் தேடும்
வானம்.

கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
ஒளிப்போட்டியில் வென்று
கம்பீரித்து நிற்கும்
விடிவெள்ளி.

முன் தூங்கி முன்னெழும்
சுறுசுறுப் பறவைகளின்
இரைதேடும் பயணங்களின்
துவக்கம்.

இன்னும்.....

கவிதையை முடித்துக்
கண்ணுறங்கி விழித்ததும் -

கனவில் மட்டுமே
காணக் கிடைக்கும் இன்பங்களைக்
கண நேரத்தில்
கணகண ஒலியில் அபகரிக்கும்
அலார அரக்கர்கள்.

இன்னொரு மோசமான நாளின்
துவக்கத்தை
உணர்ந்து விட்ட
துயரப் பெருமூச்சு.

தண்ணீரைத் தேடிக்
கைகளை ஒடித்துக்
குழாய்களை அடித்துக்
காற்றோடு போராடும்
விடாமுயற்சிகள்.

அன்றைய காய்ச்சலுக்குப்
பொருள் தேடும் வகை பற்றித்
தேறாத சிந்தனைகள்.

விடிவுக்குக் காத்திருந்தும்
ஏன் விடிந்ததென்ற
எரிச்சலை உள்ளடக்கிய
இயலா ஏக்கங்கள்.