Sunday, October 14, 2012

31. திரைகள்


அங்கம் விதிர்த்திருக்க, அன்பு உடைப்பெடுக்கத்
திங்களைக் கவ்வி மறைக்கும் திரளான மேகமொக்கும்
தங்கம் கருத்தாற்போல் ஒளியகன்ற முகத்திலாடும்
செங்கணிரண்டிலும் வெள்ளமாய்ப் பெருகும் நீர்
பொங்கும் பிரவாகமாய்ப் பரவ விடாமல் தேக்கியதால்
அங்கே சிறையுண்ட நீராக உலகை மறைத்திடும் திரை ஒன்று.


மனதுக்கினிய கணவன் மறைந்திட்ட மனச்சோர்வும்
எனதென்ற உரிமை அங்கே பறிபோன பதற்ற நிலையும்
மணவாழ்வின் இன்பமெல்லாம் மண்ணாகி மடிந்து போன
கணநேரப் பொழுது தந்த கல்லான மனச் சுமையும்
பிணமான இனியவனைப் பார்ப்பதால் கூடுவதால்
கனமான சேலைத் தலைப்பால் முகமூடும் திரை ஒன்று.


எத்தனையோ காட்சிகள் இதுபோன்று கண்டிருந்தும்
அத்தனையும் தமக்கல்ல என்றதோர் இறுமாப்பில்
இத்தரையில் என்றோ தமக்கும் வரும் இந்நிலை என்ற
தத்துவத்தை உணராமல் தம் மனம்போல் வாழ்ந்து வரும்
பித்தரான மனிதரின் புத்தியை மரக்க வைத்திவ் வாழ்வே
நித்தியம் என உணர்த்தும் மாயையின் திரை ஒன்று.


இப்படிப் பல திரைகள் மறைத்திருக்கும் மாந்தர் பலர்
எப்படி அழைத்தும் செவிமடாமல் குறையின்றித் துயில்கின்ற
அப்பழுக்ககன்ற ஆடைத் திரைக்குள் மறைந்தவன்
செப்புமொழி ஏதுமின்றி ஆழ்ந்திருக்கும் நித்திரையும்
எப்படியோ உலகை மறைக்கும் வலுவான ஓர் திரைதான்
எப்பாலும் நிறைந்திருக்கும் இறைவனிட்ட திரை இதுவே!



No comments:

Post a Comment