Wednesday, October 10, 2012

16. விடிவை நோக்கி


இருட்போர்வையை மெல்ல விலக்கி
வெளிச்சத்தைத் தேடும்
வானம்.

கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
ஒளிப்போட்டியில் வென்று
கம்பீரித்து நிற்கும்
விடிவெள்ளி.

முன் தூங்கி முன்னெழும்
சுறுசுறுப் பறவைகளின்
இரைதேடும் பயணங்களின்
துவக்கம்.

இன்னும்.....

கவிதையை முடித்துக்
கண்ணுறங்கி விழித்ததும் -

கனவில் மட்டுமே
காணக் கிடைக்கும் இன்பங்களைக்
கண நேரத்தில்
கணகண ஒலியில் அபகரிக்கும்
அலார அரக்கர்கள்.

இன்னொரு மோசமான நாளின்
துவக்கத்தை
உணர்ந்து விட்ட
துயரப் பெருமூச்சு.

தண்ணிரைத் தேடிக்
கைகளை ஒடித்துக்
குழாய்களை அடித்துக்
காற்றோடு போராடும்
விடாமுயற்சிகள்.

அன்றைய காய்ச்சலுக்குப்
பொருள் தேடும் வகை பற்றித்
தேறாத சிந்தனைகள்.

விடிவுக்குக் காத்திருந்தும்
ஏன் விடிந்ததென்ற
எரிச்சலை உள்ளடக்கிய
இயலா ஏக்கங்கள்.

No comments:

Post a Comment